உள்ளூர் செய்திகள்

225 பேருக்கு ரூ.20.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

Published On 2023-06-18 14:34 IST   |   Update On 2023-06-18 14:34:00 IST
  • கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 1027 கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
  • 225 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 2-ந் தேதி தொடங்கி நிறைவடைந்தது.

இதில், கிருஷ்ணகிரி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 1027 கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

பெரும்பாலான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, தீர்வு காணப்பட்டது. நிறைவு நாளான நேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத் தலைமை தாங்கினார். இதில், வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்படி, முதியோர், மாற்றுத்திறனாளி மற்றும் விதவை உதவித்தொகை 100 பேருக்கும், இயற்கை மரண உதவித்தொகை 30 பேருக்கும், இலவச வீட்டு மனை பட்டா 3 பேருக்கு என ரூ.20 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலும், உட்பிரிவு பட்டா மாற்ற் 51 பேருக்கும், குடும்ப அட்டை 25 பேருக்கும், பட்டா மாற்றம் 16 பேருக்கும் என மொத்தம் 225 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் விஜி, குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தார் ரமேஷ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News