சிக்கதாசம்பாளையத்தில் 2 ஆண்டுகளாக கோவிலில் தேங்கி நிற்கும் கழிவு நீர்
- 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.
- கடந்த 2 ஆண்டுகளாக கோவிலில் பக்தகர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் உள்ளது. இதில் 2-வது வார்டு பவர் ஹவுசில் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் திரண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆடி மாதத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடக்கும்.
கடந்த 2021-ம் ஆண்டு நெடுஞ்சாலை துறையினர் சிராஜ் நகரில் இருந்து கோவில் வழியாக சீரங்கன்ராயன் ஓடை வரை சாலையோரத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது.
இதில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் வரை வந்து பாதியில் இந்த பணி நிறுத்தப்பட்டது. இதனால் கால்வாய் வழியாக வரும் கழிவுநீர் அனைத்தும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் முழுவதும் தேங்கி நிற்கிறது.
இதனால் கடந்த 2 ஆண்டுகளாக கோவிலில் பக்தகர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுதொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுத்தி உள்ளனர். இதுகுறித்து வார்டு உறுப்பினர் சரிதா கூறும்போது, கடந்த 2 ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் கட்டி பாதியில் நிறுத்தியதால் அங்காளம்மனை தரிசனம் செய்ய முடியாத நிலையில் உள்ளது.
இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அம்மன் கோவில் வாசலில் கூட நிற்க முடியாத நிலை உள்ளது என்றார்.