10-ந் தேதி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
- வருகிற 10-ந் தேதி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடக்கிறது.
- இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இந்த துறையின் அரசாணை (நிலை) எண் 52, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை நாள்: 25.6.2012-ன் படி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பணிகள் வழங்கப்பட்டு வருவது தேசிய அளவில் முன்னோடி முயற்சியாகும்.
இது குறித்து விரிவான அறிவுரைகள் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த திட்ட வேலை அட்டைகோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத்தி றனாளிகள் அனைவருக்கும் பிரத்யேக நீல நிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் நாளது வரை 5 ஆயிரத்து 170 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளது குறைகளை தீர்க்கும் வகையில் பிரதி மாதம் 2-வது செவ்வாய்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும், 2 மாதங்களுக்கு ஒரு முறை 2-வது செவ்வாய்கிழமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முன்னிலையிலும் குறைகேள் முகாம்கள் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று (1-ந் தேதி) முதல் 10-ந் தேதி வரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியைச் சார்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் நீல நிற வேலை அட்டையை பெற்று பயன்பெறலாம் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.