- கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
- கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் (38). பெயிண்டரான இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், மகளும் உள்ளனர். 2012-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து முத்துலட்சுமி தனது மகளுடன் தாய் வீட்டிற்கு வந்து விட்டாள். 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது சகோதரி வீட்டில் இருந்த முத்துலட்சுமியை தாக்கி கனகராஜ் பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
இதில் அவரது மகள் தீக்காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக முத்துலட்சுமி அம்மாபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்த பின் மாஜிஸ்திரேட் பகவதியம்மாள் தீர்ப்பளித்தார். அதில் கனகராஜுற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.