100 நாள் வேலை கேட்டு விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தில் கிராமமக்கள் மனு
- 2 ஆண்டுகளாக எந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகளும் செய்யப்படவில்லை.
- 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வேலை வழங்கிட வேண்டும்
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதலிபட்டி கிராம மக்கள் தங்களது கிராமத்தில் பொதுமக்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்கிட வலியுறுத்தி விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தில் மனு வழங்கினர்.
மனுவில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், பேரிலோவன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முதலிபட்டி கிராமத்தில் கருப்பசுவாமி கோவில் கண்மாய், புதுஅம்மன் கோவில் கண்மாய், பழையபட்டி கண்மாய் மற்றும் வரத்துக்கால்வாய், தில்லை ஊரணி கண்மாய் மற்றும் வரத்துக்கால்வாய் ஆகிய இடங்களில் கடந்த 2 ஆண்டுகளாக எந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகளும் செய்யப்படவில்லை. எனவே முதலில் வெட்டி கிராம மக்கள் அருகில் உள்ள பேரிலோவென்பட்டியில் சென்று 100 நாள் வேலை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. எனவே தங்களது கிராமத்திலேயே 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வேலை வழங்கிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இல்லாததால் யூனியன் அலுவலர்களிடம் மனுவை வழங்கிவிட்டு சென்றனர்.