நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
- முன்விரோதம் காரணமாக விவசாயியை மர்மகும்பல் தாக்கியது.
- கும்பலை கைது செய்யக்கோரி கிராம மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே சித்தர்கள் நத்தம் ஊராட்சி மல்லியம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 37). விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் நிலப்பிரச்சினையால் முன்விரோதம் இருந்து வந்தது. இதில் இரு தரப்பினரும் தாக்கி கொண்டதாக 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் சிவக்குமார் அணைப்பட்டி யில் உள்ள உறவினர் தென்னந்தோப்பில் தேங்காய் வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு புகுந்த மர்ம கும்பல் அவரை தாக்கியதில் படுகாயம் அடைந்தார். நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்திய கும்பலை உடனே கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.