உழவர் சந்தையில் அகற்றாமல் இருக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு
- அழுகிய காய்கறிகளால் துர்நாற்றம் வீசுகிறது
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தொரப்பாடி டோல்கேட் பகுதியில் உழவர் சந்தை செயல்ப்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது விவசாய நிலங்களில் பயிரிடப்படும் காய்கறிகளை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
கிராமப்புறங்களில் இயற்கையாக விளைவிக்கப்படும் காய்கறிகள் குறைந்த விலையில் கிடைப்பதால் ஏராளமானோர் இங்கு வந்து வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் உழவர் சந்தையில் போடப்படும் குப்பைகளை, மாநகராட்சி துப்புர பணியாளர்கள் சரிவர அகற்றுவதில்லை என கூறப்படுகிறது. கடமைக்காக வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே அங்கு குப்பைகள் அகற்றி சுத்தம் செய்யப்படுகிறது.
சுமார் 3 நாட்களுக்கு மேல் குப்பைகள் அகற்றாமல் இருப்பதால், அழுகிய காய்கறிகளால் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
உழவர் சந்தைக்கு காய்களை வாங்க வரும் பொதுமக்கள் துர்நாற்றம் தாங்காமல் மூக்கை பிடித்தபடியே செல்கின்றனர்.
எனவே உழவர் சந்தையில் சேகரிக்கப்படும் குப்பைகளை தினமும் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.