சத்துவாச்சாரியில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
வேலூர் மாவட்டத்தில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி 700 இடங்களில் ஒலிபரப்பு
- நாகநதி உறை கிணறுகள் குறித்து பேசினார்
- பணியில் ஈடுபட்ட பெண்களுக்கு பாராட்டு
வேலூர்:
பிரதமர் மோடியின் மன் பாத் எனும் மனதின் குரல் ஒலிபரப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. பிரதமர் மோடி நேரடியாக பேசியது வேலூர் மாவட்டத்தில் 700 இடங்களில் ஒலிபரப்பப்பட்டது.
மாநகராட்சி பகுதியில் 100 இடங்களில் ஒலிபரப்பினர். சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது.
நிகழ்ச்சியில் பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட தலைவர் மனோகரன், கவுன்சிலர் சுமதி மனோகரன், மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகநாதன், எஸ்.எல்.பாபு, மாவட்ட அலுவலக செயலாளர் கலந்து கொண்டனர்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாகநதி ஆறு திருவண்ணாமலை மாவட்டத்தின் ஜவ்வாது மலையில் உருவாகி ஆரணி வழியாக வாழைப்பந்தல் எனும் இடத்தில் செய்யாற்றில் கலக்கிறது. இந்த ஆறு வேலூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.
கணியம்பாடி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் மழைக்காலங்களில் நாகநதி ஓடைகளில் வரும் நீர் ஆவியாவதை தடுத்து நேரடியாக பூமிக்குள் செலுத்தக்கூடிய உறை கிணறுகள் 354 இடங்களில் அமைக்கப்பட்டது.
இதனால் இப்பகுதியில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. இதனால் கோடையிலும் இப்பகுதியில் நெல், வாழை போன்ற தண்ணீர் தேவையுள்ள பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த திட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் பணியாற்றும் 20 ஆயிரம் பெண்கள் மற்றும் வாழும் கலை அமைப்பினரும் ஒன்றிணைந்து இந்த திட்டத்தை நிறைவேற்றி உள்ளனர்.
இந்த நாகநதி ஆற்றில் வற்றாத ஜீவ நதியாக தண்ணீர் சென்று கொண்டுள்ளது. பணியில் சிறப்பாக ஈடுபட்ட பெண்கள் உட்பட அனைவருக்கும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.