புதிய கட்டிடங்களுக்கு வரி விதிப்பு நடைமுறை அமல்
- மண்டல அலுவலகங்களில் நேரடியாக விண்ணப்பித்து வரி விதிப்பு செய்து கொள்ளலாம்
- சொத்துவரி பொது சீராய்வு நடைபெற்று வந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் புதிய கட்டிடங்களுக்கு ஆவணங்களை சமர்ப்பித்து வரி விதிப்பு செய்து கொள்ளலாம் என ஆணையர் அசோக்குமார் தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
"வேலூர் மாநகராட்சியில் சொத்துவரி பொது சீராய்வு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைபெற்று வந்தன. இதன் காரணமாக, புதிய கட்டிடங்களுக்கு வரி விதிப்புகள் செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது சொத்துவரி பொது சீராய்வு பணிகள் முடிவுற்றுள்ளன.
வரி விதிப்பு செய்யப்படாத கட்டிடங்களுக்கு புதிய வரி விதிப்பு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே, பொதுமக்கள் புதிய வரி விதிப்பு செய்ய சொத்து உரிமைக்கான பத்திரப்பதிவு நகல் மற்றும் கட்டிட அனுமதி உள்ளிட்ட ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் நேரடியாக விண்ணப்பித்து வரி விதிப்பு செய்து கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.