உள்ளூர் செய்திகள்

கெங்கையம்மன் கோவிலில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி

Published On 2023-05-01 13:06 IST   |   Update On 2023-05-01 13:06:00 IST
  • குடியாத்தம் சிரசு திருவிழாவை முன்னிட்டு நடந்தது
  • ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

குடியாத்தம்:

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு விழாவையொட்டி நேற்று நள்ளிரவு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் மிகவும் புகழ்பெற்ற கோவிலாகும். இங்கு நடைபெறும் கெங்கையம்மன் சிரசு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. திருவிழாவை காணவும், லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குடியாத்தம் வருவார்கள்.

இந்த ஆண்டு கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு தொடங்கியது. குடியாத்தம் ராபின்சன் குளக்கரை பகுதியில் அலங்கரிக்கப்பட்ட பூங்கரகம் ஊர்வலம் தொடங்கியது.

தொடர்ந்து முத்தாலம்மன் கோவில் சென்று அங்கிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் ஊர்வலமாக வந்து இன்று அதிகாலை 5 மணி அளவில் கோவிலை வந்தடைந்தது.

சுமார் 3 மணிநேரம் மக்கள் வெள்ளத்தில் பூங்கரகம் மிதந்து வந்தது. இரவென்றும் பாராமல் காப்பு கட்டும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். பூங்கரகம் கோவில் வளாகத்தை சுற்றி வந்து மூலவர் சன்னதி அடைந்தது.

காப்பு கட்டும் நிகழ்ச்சியை முன்னிட்டு விடியவிடிய வாணவேடிக்கை நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, கோயில் ஆய்வாளர் பாரி, ஊர்நாட்டாமை ஆர்.ஜி.சம்பத், ஊர் தர்மகர்த்தா கே.பிச்சாண்டி திருப்பணிக் குழு தலைவர் ஆர்.ஜி.எஸ். கார்த்திகேயன் உள்ளிட்ட விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

காப்பு கட்டும் நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர்.

வரும் 14-ந்தேதி தேர்த்திருவிழாவும், 15-ந்தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும், வரும் 17-ந்தேதி பூப்பல்லக்கும் நடைபெறுகிறது.

Tags:    

Similar News