உள்ளூர் செய்திகள்

5 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

Published On 2022-08-31 15:05 IST   |   Update On 2022-08-31 15:05:00 IST
  • போலீசார் 4 ஆயிரம் பேர் பாதுகாப்பு
  • முக்கிய வீதிகள், சந்திப்புகளில் வைக்கப்பட்டுள்ளது

வேலூர்:

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இதில் இந்து முன்னணி சார்பில் மட்டும் 1600 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு விநாயகர் சதுர்த்தி விழா நடப்பதால் விழா குழுவினர் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கற்பக விநாயகர், செல்வ விநாயகர், புலியை அடக்கும் விநாயகர், குதிரை, பசு மீது அமர்ந்திருக்கும் விநாயகர் என விதவிதமான சிலைகள் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

பந்தல் அமைத்து வாழை தோரணங்கள் கட்டப்பட்டுள்ள மேடையில் விநாயகர் சிலை வைத்து இன்று காலை கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது . தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பல்வேறு இடங்களில் அன்னதானம் செய்யப்பட்டது‌.

மேலும் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

விநாயகர் சதுர்த்தியொட்டி கோவில்களில் உள்ள விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது. வெள்ளிக்கவசம் தங்கக் கவசம் அலங்காரத்தில் விநாயகர் அருள் பாலித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விநாயகர் சிலைகளுக்கு விழா குழுவினரே பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.மேலும் வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தெரு சந்திப்புகளில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், கலை நிகழ்ச்சிகள் என விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டியது.

Tags:    

Similar News