உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் மனு அளிக்க வந்த போது எடுத்த படம்.

வேலூரில் முறைகேடாக சாலை பணி நடப்பதாக புகார்

Published On 2023-09-11 15:21 IST   |   Update On 2023-09-11 15:21:00 IST
  • குடியாத்தம் மதுக்கடைகளால் கடும் அவதி
  • பெண் தர்ணா - கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் லதா அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வேலூர் மாநகராட்சியில் 1300 கிலோமீட்டர் சாலை அமைத்தல், பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த பணிகளில் பாதாள சாக்கடை திட்டம், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் பணிகளுக்காக குழாய் அமைக்கும் பணிகள் நடைபெறாமலேயே சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வேலூர் மாநகராட்சியின் 22 முதல் 25 வார்டுக்கு உட்பட்ட தெருக்களில் அமைக்கப்படும் சாலை பணிகளில் பாதாள சாக்கடைத் திட்ட பணிகளும் குடிநீர் திட்ட பணிகளும் நிறைவு பெறாமலே சாலைகள் அமைக்கப்ப டுகிறது. இவ்வாறு அமைக்கப்படும் சாலைகள் மீண்டும் தோண்டப்பட்டால் அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும் என்பதால் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

மதுகடைகளால் அவதி

எஸ்.டி.பி.ஐ. கட்சி தொகுதி தலைவர் அல்தாப் அஹ்மத் அளித்துள்ள மனுவில்:-

குடியாத்தம் நகரத்தின் முக்கிய சாலையாக உள்ள காமராஜர் பாலம் அருகில் ஒரே இடத்தில் 2 மதுபான கடைகள் இயங்கி வருகிறது. இந்த பகுதி எப்போதுமே மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடமாகும். மது கடைகளால் மேலும் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் முக்கிய சாலையாக இருப்ப தினாலும் நோயாளிகளும் அதிகம் அந்த சாலையைத்தான் பயன்படுத்துகின்றனர்.

இதனால் எந்நேரமும் இந்த சாலை வாகன நெரிசலாக காணப்படும்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு போக்குவரத்து நெரிசலால் சாலையோரமாக நின்று கொண்டிருந்த ஒருவர் மீது பஸ் மோதியதில் அந்த நபர் தற்போது காலை இழந்து தவிக்கிறார்.

எனவே மதுபான கடைகளை அங்கிருந்து அகற்ற வேண்டும் எனக்கூறியுள்ளார்.

பெண் தர்ணா

கலெக்டர் அலுவலகத்தில் காயிதே மில்லத் அரங்கத்தின் முன்பாக திடீரென பெண் ஒருவர் தர்ணா செய்தார்/

பின்னர் அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்று கலெக்டரிடம் மனு அளிக்க செய்தனர்.

அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

என் பெயர் பரிமளா. நான் காட்பாடி தாலுகாமேல்பாடி கிராமத்தில் வசித்து வருகிறேன்.

நான் காதல் திருமணம் செய்து கொண்டேன்.எனக்கு என் அப்பா முனிசாமி அவருடடைய நிலத்தை எனக்கு செட்டில்மெண்ட் கொடுத்துள்ளார்.

கிராம நிர்வாக அதிகாரி, துணை தாசில்தார் சான்று பெற்று 4 வருடங்களுக்கு முன்பு பத்திரப்பதிவு செய்துள்ளேன். என்னுடைய அப்பா கடந்த மாதம் இறந்துவிட்டார்.இன்னும் அவர் பெயரிலே பட்டா உள்ளது. இதனை எனது பெயருக்கு பட்டா மாற்றி தர வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.

கணியம்பாடி ஒன்றியம் மூஞ்சூர் பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட ஆற்காட்டான் குடிகை பொதுமக்கள் அளித்துள்ள மனுவில்:-

எங்கள் ஊரில் செயல்பட்டு வரும் நடுநிலைப் பள்ளிக்கு போதுமான வகுப்பறை கட்டிடம் இல்லாததால், மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

எனவே கலெக்டர் உடனடியாக பள்ளி கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் இவர் மனுவில் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News