உள்ளூர் செய்திகள்

குடியாத்தத்தில் பழைய நகராட்சி அலுவலகத்தில் தீ விபத்து

Published On 2022-11-17 15:22 IST   |   Update On 2022-11-17 15:22:00 IST
  • பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
  • போலீசார் விசாரணை

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலக வளாகத்தில் சுமார் 45 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடம் உள்ளது.

முன்பு இந்த கட்டிடத்தில் நகர மன்ற கூட்டங்கள் நடைபெற்று வந்தன. சில ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி வளாகத்தில் புதியதாக பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டிடங்கள் கட்டப்பட்டதால் இந்த பழைய கட்டிடத்தில் கூட்டங்கள் நடைபெறுவது இல்லை.

இந்த பழைய கட்டிடத்தில் குடியாத்தம் நகராட்சி சுகாதார பணிகளுக்கு தேவையான கருவிகள், ப்ளீச்சிங் பவுடர், பினாயில், கிரிமிநாசினி மற்றும் கொரோனா காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் இருந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் அந்த பழைய கட்டிடத்தில் இருந்து தீ ஜுவாலைகள் தெரிந்துள்ளது. அந்த வழியாக சென்ற ஆட்டோ டிரைவர் கள் தீ விபத்து குறித்து நகராட்சி அலுவலகத்திற்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு பணியில் ஈடுபட்டனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் அமலுவிஜயன் எம். எல். ஏ., நகர மன்ற தலைவர் சவுந்தரராசன், ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பி.சிசில் தாமஸ் சுகாதார அலுவலர் மொய்தீன், துப்புரவு பணி மேற்பார்வையாளர் பிரபுதாஸ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை பார்வை யிட்டனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி,கே.வி. குப்பம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட போலீசார் தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தீ விபத்து ஏற்பட்ட நகராட்சி பழைய கட்டிடத்தின் அருகிலேயே சில மீட்டர் தொலைவில் பெட்ரோல் பங்குகளும், பின்பகுதியில் அரசு மருத்துவமனையும் இருப்பதால் தீ மேலும் பரவாமல் இருக்கவும் பாதுகாப்பு பணி தீவிர படுத்தப்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் மூலம் சுமார் 2 மணி நேரம் போராடி முற்றிலும் தீயணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

இந்த தீ விபத்துக்கான காரணம் குடியாத்தம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News