கஞ்சா விற்ற 21 பேர் குண்டர் சட்டத்தில் கைது
- போலீஸ் சூப்பிரண்டு தகவல்
- கைதிகளின் வங்கிக்கணக்குகள் முடக்கம்
வேலூர்:
வேலூர் தொரப்பாடி ஜீவாநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 39). இவர் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். எனவே இவர் மீது பாகாயம் போலீஸ் நிலையத்தில் 6 வழக்குகள் உள்ளது.
இவர் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்ததால் போலீசார் கைது செய்தனர். குண்டர்சட்டமும் இவர் மீது பாய்ந்துள்ளது. இந்த நிலையில் இவர் மனம் திருந்தி வாழ முடிவு செய்தார். அதன்படி இனி கஞ்சாவை விற்பனை செய்ய மாட்டேன் என்று பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம் பிரமாண பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்.
தான் மனம் திருந்துவதாகவும், தன்னுடைய வாழ்வாதாரத்துக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் முன்னிலையில் நேற்று மனந்திருந்தி வாழ ஆசைப்படுவதாக தெரிவித்தார்.
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக 21 குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 24 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 198 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 322 கிலோ வரை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்ற செயல்களில் ஈடுவோர்கள் மனம் திருந்த வேண்டும். ராஜேந்திரன் திருந்தி வாழ ஆசைப்படுகிறார்.
அவர் டீக்கடை வைக்க உதவிகோரி உள்ளார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துடன் முடிவு செய்து அவர் தொழில் தொடங்க ஏற்பாடு செய்யப்படும். சாராயம், கஞ்சா விற்பனை செய்தல் போன்ற எந்த வகையான குற்றத்தில் ஈடுபட்டாலும் மனம் திருந்தினால் அவர்களுக்கு உதவி செய்யப்படும்.
வேலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்தவர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என்றார்.