உள்ளூர் செய்திகள்

வெள்ளலூர் பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்-பொதுமக்கள் மனு

Published On 2023-09-25 15:02 IST   |   Update On 2023-09-25 15:02:00 IST
  • வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள், சுமார் ரூ.40 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.
  • இங்கு தற்போது 65 சதவீத பணிகள் முடிந்து விட்டன.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் மீட்புக் குழுவினர் அளித்து உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் என்பது கோவை மக்களின் நீண்டநாள்கனவு. அவிநாசி, திருச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய சாலைகள் வழியாக செல்லும் வாகனங்களின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள், சுமார் ரூ.40 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. இங்கு தற்போது 65 சதவீத பணிகள் முடிந்து விட்டன. இந்த நிலையில் அங்கு கட்டுமான பணிகள் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளன.

வெள்ளலுாரில் பஸ் நிலையம் அமைந்தால் அனைத்து பிரதான சாலைகளிலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும். மேலும் நீலாம்பூர், செட்டிபாளையம் என வேறு பகுதிகளுக்கு மேற்கண்ட பஸ்நிலைய கட்டுமான திட்டத்தை மாற்றி அமைத்தால் கூடுதல் செலவு மற்றும் தேவையற்ற காலதாமதமும் ஏற்படும்.

எனவே நிறுத்தப்பட்ட வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகளை முற்றிலுமாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

தொடர்ந்து வெள்ளலூர் பஸ் நிலைய மீட்புக்குழுவினர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், வெள்ளலூரில் பஸ் நிலைய கட்டுமான பணிகளை முற்றிலுமாக நிறுத்தினால்பொதுமக்களின் வரிப்பணம் வீணாகும். மேலும் அரைகுறையாக கட்டப்பட்டு உள்ள வெள்ளலூர் பஸ் நிலைய பகுதிகளில் தற்போது ஒருசிலர் மது அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றசெயல்களை அரங்கேற்றி வருவதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர்.

Tags:    

Similar News