மின்கம்பங்களில் படர்ந்திருக்கும் செடி, கொடிகள்
- சுற்றுலா பயணிகள் எப்போதும் வந்த வண்ணம் இருப்பர்.
- பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நேரு பூங்கா, கொடநாடு காட்சி முனை, சுண்டட்டி ஏரி, கேத்ரின் நீர்வீழ்ச்சி என பல முக்கிய சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் எப்போதும் வந்த வண்ணம் இருப்பர்.
இதனால் கோத்தகிரி பகுதியில் எப்போதுமே வாகன போக்குவரத்து அதிகமாகவே இருக்கும்.
இந்த நிலையில் கோத்தகிரியின் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே உள்ள மின்கம்பங்களில் செடிகொடிகள் வளர்ந்து புதராக காணப்படுகிறது. இதுபோன்று பெரும்பாலான மின்கம்பங்களில் செடிகள் உள்ளது. இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். ஒரு சில இடங்களில் இருப்பவை புலப்படாவிட்டாலும், கோத்தகிரி பேரூராட்சி அலுவலகம் எதிரில் உள்ள மின்கம்பத்திலும் இதே போன்று செடிகொடிகள் படர்ந்து காணப்படுகிறது.
இதனால் மின்கசிவு ஏற்பட அதிகப்படியான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை அதனை அகற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் செய்து வருகிறார்கள்.
எனவே இதுபோன்ற மின்கம்பங்களில் வளர்ந்திருக்கும் செடி–கொடிகளை அகற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.