உள்ளூர் செய்திகள்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தை காண குவிந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

Published On 2023-07-18 07:38 GMT   |   Update On 2023-07-18 07:38 GMT
  • தாலாட்டுப்பாடல்கள் பாடியவுடன் ஊஞ்சல் உற்சவம் முடிவடைந்தது.
  • பவானி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டது.

விழுப்புரம்:

மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள் விபூதி, குங்குமம், இளநீர் பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

உற்சவ அம்மனுக்கு பலவித பூக்களைக் கொண்டு பவானி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டது. இரவு 10.30 மணிக்கு அங்கிருந்த உற்சவ அம்மனை பம்பை, மேள தாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்த்தினர். பின்பு பூசாரிகள் பக்திப் பாடல்களைப் பாடினர். இதைக்கண்ட பக்தர்கள் பலர் அருள் வந்து ஆடினர். ஊஞ்சலில் அம்மன் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இரவு 12 மணியளவில் தாலாட்டுப்பாடல்கள் பாடியவுடன் ஊஞ்சல் உற்சவம் முடிவடைந்தது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பெங்களூர், புதுச்சேரியிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம், பூசாரி அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News