உள்ளூர் செய்திகள்

திருச்சியில் புதிய உச்சம் தொட்ட தக்காளி விலை குறைந்தது - மக்கள் நிம்மதி

Published On 2022-10-14 09:42 GMT   |   Update On 2022-10-14 09:42 GMT
  • தக்காளி மண்டி சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்
  • வேலை நிறுத்தம் காரணமாக திருச்சி காந்தி மார்க்கெட் சில்லறை சந்தையில் கடந்த 4 தினங்களாக ஒரு கிலோ தக்காளி ரூ.80, ரூ.100 என விலை கடுமையாக உயர்ந்தது.

திருச்சி,

திருச்சி காந்தி மார்க்கெட் தக்காளி மண்டி சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஒரு பெட்டிக்கு ரூ.11 கூலி வழங்குவது எனவும், இந்த ஒப்பந்த காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது எனவும் முடிவு செய்தனர்.

இதில் கூலி உயர்வை ஏற்றுக்கொண்ட தொழிலாளர்கள் ஒப்பந்த காலத்தை இரண்டே முக்கால் ஆண்டுகளாக குறைக்க கோரி மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் காவல்துறையினரின் பெரும் முயற்சியால் தாசில்தார் முன்னிலையில் தக்காளி கமிஷன் மண்டி வியாபாரிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையே நேற்று முன்தினம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் மூன்றாண்டு ஒப்பந்த காலத்தில் ஒன்றரை மாதம் குறைப்பது என இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். அதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக திருச்சி காந்தி மார்க்கெட் சில்லறை சந்தையில் கடந்த 4 தினங்களாக ஒரு கிலோ தக்காளி ரூ.80, ரூ.100 என விலை கடுமையாக உயர்ந்தது.

வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்ட காரணத்தால் இன்றைய தினம் தக்காளி விலை சில்லரை மார்க்கெட்டில் கிலோ ஒன்றுக்கு ரூ.30 ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டதாக தக்காளி கமிஷன் மண்டி வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கலீலுல் ரகுமான் தெரிவித்தார்.

மேலும் நேற்றைய தினம் ரூ.1500-க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு பெட்டி தக்காளி இன்றைய தினம் ரூ.600-க்கு விற்கப்பட்டதாக கூறினார். இந்த விலை குறைவால் பொதுமக்கள் நிம்மதியடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News