உள்ளூர் செய்திகள்

ஆபாச படங்களை காண்பித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை

Published On 2022-08-03 09:07 GMT   |   Update On 2022-08-03 10:08 GMT
  • ஆபாச படங்களை காண்பித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது
  • தம்பதி மீது போக்சோவில் வழக்கு

திருச்சி :

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள காட்டூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், தான் வீட்டில் இல்லாத நேரத்தில், தனது 16 வயது மகளிடம் அருகில் வசிக்கும் எனக்கு தங்கை உறவு முறை உள்ள பெண் செல்போனில் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை காண்பித்துள்ளார்.

பின்னர் தனது மகளை அவளது கணவருடன் (சித்தப்பா முறை) உல்லாசமாக இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியும் உள்ளார். இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் உன்னையும், உன் அம்மாவையும் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டி உள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஆண்டு மே மாதத்தில் நடந்துள்ளது.

ஆனால் கொலை மிரட்டல் அச்சத்தால் எனது மகள் விஷயத்தை வெளியில் கூறாமல் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்து இருந்துள்ளார். இப்போது தான் என் மகள் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து கூறினார். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா, சித்தி ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்ததை அறிந்த அந்த தம்பதியினர் தலைமறைவாகி விட்டனர். சிறுமிகள், குழந்தைகளுக்கு வெளி நபர்களால் பாலியல் தொல்லை ஏற்பட்டு வந்த நிலையில் சித்தப்பா முறையில் இருக்கும் உறவினரும், அவரது மனைவியும் சேர்ந்து துன்புறுத்தியது பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Tags:    

Similar News