உள்ளூர் செய்திகள்

வினாத்தாள் கட்டணம் வசூலிக்க ஆசிரியர் கூட்டணி கடும் எதிர்ப்பு

Published On 2022-12-14 09:47 GMT   |   Update On 2022-12-14 09:47 GMT
  • வினாத்தாள் கட்டணம் வசூலிக்க ஆசிரியர் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
  • அரசு பள்ளி மாணவர்களிடம்

திருச்சி,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் சு.குணசேகரன், பொதுச் செயலாளர் முத்துசாமி, பொருளாளர் சே.நீலகண்டன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் முற்றிலும் இலவசக் கல்வியை அளித்து வருகிறது. இதை ஒரு கொள்கையாகவே அரசு பின்பற்றி வருகிறது.

மேலும் பணம் இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு விலையில்லா பாடநூல், குறிப்பேடுகள், சீருடை, காலணி, புத்தகப்பை, மடிக்கணினி, மிதிவண்டி, கணித உபகரணங்கள் என 14-க்கும் மேற்பட்ட நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் எந்தவொரு கட்டணமும் மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி வசூல் செய்யப்படுவதில்லை.

இந்நிலையில் மயிலாடுதுறை தொடக்க கல்வி அலுவலர் நேற்றைய தினம் பிறப்பித்துள்ள உத்தரவில் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடமும் தேர்வுக்கட்டணம் வசூல் செய்து செலுத்த வேண்டும் கூறியுள்ளார். தேர்வுகள் 3 பருவங்களாக நடத்தப்படுவதால் நடக்க இருக்கும் இரண்டாம் பருவம் தேர்வுக்கு மாணவர் ஒருவருக்கு ரூ.40 வீதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இங்கு செயல்படும் அச்சகங்களிலேயே குறைந்த எண்ணிக்கையில் வாங்குபவர்களுக்கே கேள்வித்தாள் ரூ.6-க்கு கிடைக்கிறது. எனவே அரசு கொள்கைக்கு முரண்பட்ட இந்த உத்தரவை மயிலாடுதுறை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்த கேள்வித்தாள்களை இலவசமாக வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News