மலேசியாவுக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் பறிமுதல்-திருச்சி விமான நிலையத்தில் அதிரடி
- திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.5.5 லட்சம் வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
- உடலில் மறைத்து எடுத்து வந்த ரூ.5.5 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர், சிங்கப்பூர் டாலர், மலேசியன் ரிங்கிட் உள்ளிட்ட வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது
திருச்சி:
கொரோனா பெருந்தொற்று நாடு முழுவதும் கட்டுக்குள் வந்ததையடுத்து திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது.
அத்துடன் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதையடுத்து கூடுதல் விமான சேவைகளும் தொடங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் விமான சேவைகள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
இந்த விமானங்களில் சுங்கத்துறையின் சார்பில் பறிமுதல் செய்யப்பட்டு வரும் தங்கத்தின் அளவும் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது.
இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக சென்னையைச் சேர்ந்த சவுகத் சாதிக் (வயது 33) என்ற பயணி வந்தார். அப்போது அவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அவர் உடலில் மறைத்து எடுத்து வந்த ரூ.5.5 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர், சிங்கப்பூர் டாலர், மலேசியன் ரிங்கிட் உள்ளிட்ட வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.