ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்குள் புகுந்து கத்தி முனையில் ரூ.1லட்சம் கொள்ளை
- ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்குள் புகுந்து கத்தி முனையில் ரூ.1லட்சம் கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3 ஆண்ட்ராய்டு செல்போன்களையும் பறித்து சென்றனர்
திருச்சி:
திருவெறும்பூரில் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் புகுந்து கத்தி முனையில் ரூ.1லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி திருவெறும்பூர் இஸ்மாயில் நகர் பகுதியில் ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகம் இயங்கி வருகிறது. இதில் மேலாளராக குரு பிரசாத், புதுக்கோட்டை கீரனூர் மேலமாடத் தெரு பகுதியைச் சேர்ந்த விஜய் (வயது36) உள்ளிட்ட 3 ஊழியர்கள் பணியில் இருந்தனர். பின்னர் அவர்கள் மதிய உணவுக்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.
ரூ.1லட்சம் கொள்ளை
இந்த நிலையில் நான்கு பேர் கொண்ட கொள்ளை கும்பல் அந்த ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். அதில் ஒருவன் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தான். மற்ற மூன்று பேரும் முகமூடி அணிந்திருந்தனர். பின்னர் அவர்கள் மேலாளர் குரு பிரசாத் விஜய் உள்ளிட்ட ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டினர். பின்னர் மேஜை ட்ராவை திறந்து அதில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்க பணம் மற்றும் 3 ஆண்ட்ராய்டு செல்போன்களை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இது குறித்து விஜய் திருவரம்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள அந்த பகுதியில் பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.