உள்ளூர் செய்திகள்

உயிரிழந்த தொழிலாளி உடல் அருகே காவல் காத்த வளர்ப்பு நாய்

Published On 2023-11-15 08:27 GMT   |   Update On 2023-11-15 08:27 GMT
  • திருச்சியில் வீட்டிற்குள் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம் கிடந்தது
  • பாசத்தில் உடல் அருகே காத்திருந்து பாதுகாத்த வளர்ப்பு நாய்

திருச்சி,

திருச்சி மலைக்கோட்டை கீழ ஆண்டாள் வீதியில் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் உடனடியாக இன்று காலை திருச்சி கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டின் அறை கதவு லேசாக சாத்தப்பட்டு இருந்தது. பின்னர் கதவை திறந்து உள்ளே சென்றனர். அங்கு அந்த வீட்டில் வசித்து வந்த மதியழகன் (வயது 50) என்பவர் இறந்து கிடந்தார்.மேலும் அங்கு ஒரு நாய் இருந்து கொண்டு அவரை நெருங்க விடாமல் போலீசை கண்டு குரைத்து கொண்டு இருந்தது. தனது எஜமானர் இறந்த நிலையிலும் அவரை விட்டுப் பிரியாமல் அந்த நாய் கடந்த இரு தினங்களாக அங்கேயே படுத்திருக்கலாம் என கூறப்பட்டது.

பின்னர் ஒரு வழியாக போலீசார் நாயை துரத்தி விட்டு உடலை மீட்டனர். இதற்கிடையே தகவல் அறிந்த அவரது சகோதரர் சம்பவ இடம் விரைந்து வந்தார்.

அவ்வப்போது கூலி வேலைக்கு சென்று வந்த மதியழகன் கோவில்களில் கிடைக்கும் உணவை சாப்பிட்டு காலம் தள்ளி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது தாய் இறந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து வீட்டில் முடங்கிய அவர் உடல் நலக்குறைவால் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News