போலீஸ்காரர் போல் நடித்து முதியவரிடம் பணம் பறிப்பு
- மகாலிங்கம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், தஞ்சாவூர் செல்லும் பேருந்துக்காக காத்திருந்தார்.
- உங்களை சோதனையிட வேண்டும் என்று கூறிய அந்த நபர், சோதனையிடுவது போல நடித்து மகாலிங்கம் சட்டை பையில் கையை விட்டு அதிலிருந்த ரூ. 2000 பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.
திருச்சி,
திருச்சி திருவெறும்பூர் ஜெய் நகர் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது68). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், தஞ்சாவூர் செல்லும் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அருகாமையில் வந்த ஒரு நபர், தான் ஒரு போலீஸ்காரர் என கூறினார். பின்னர் அவரிடம் சில கேள்விகளை கேட்டார். மகாலிங்கமும் அவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து உள்ளார். அப்போது உன் மீது சந்தேகமாக உள்ளது . உன்னை சோதனையிட வேண்டும் என்று கூறிய அந்த நபர், சோதனையிடுவது போல நடித்து மகாலிங்கம் சட்டை பையில் கையை விட்டு அதிலிருந்த ரூ. 2000 பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.
இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இந்த துணிகர வழிபறி செயலில் ஈடுபட்டது திருவண்ணாமலை மாவட்டம் கிள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த சாமுன் (வயது52) என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.