ரூ.2.85 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவுடன்பிரபல கஞ்சா வியாபாரி கைது
- ரூ.2.85 லட்சம் மதிப்புள்ள கஞ்சா
- பிரபல கஞ்சா வியாபாரி கைது
திருச்சி
மணிகண்டம் கள்ளிக்குடி மார்க்கெட் அருகே கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு, காவலர் யுவராஜா ஆகியோர் ரோந்து சென்று பார்த்தனர். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் போலீஸ் வருவதை பார்த்து தான் வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் ஒரு வெள்ளை சாக்கு பையில் ஏதோ கட்டிவைத்திருந்ததை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயன்றார்.
உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து அந்த வெள்ளை பையை சோதனை செய்து பார்த்த போது அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதனை எடுத்து போலீசார் எடை போட்டு பாத்த போது சுமார் 28.500 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.பிறகு பிடிபட்ட மர்ம ஆசாமியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள கண்தீனதயாளன்நகரை சேர்ந்தவர் நைனா முகமது (வயது 50) என்பது தெரியவந்தது.
பிரபல கஞ்சா வியாபாரியான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் சுமார் 46 கஞ்சா வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து தனிப்படை போலீசார் நைனா முகமதை கைது செய்தனர்.
பிடிபட்ட கஞ்சாவின் மதிப்பு 2 லட்சத்து 85 ஆயிரம் ஆகும். மேலும் கஞ்சா விற்று வைத்திருந்த ரூ5,750 பணம் மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.