உள்ளூர் செய்திகள்

இருசக்கர வாகனம் திருட்டு தொடர்பாக 2 பேர் கைது

Published On 2022-09-05 10:15 GMT   |   Update On 2022-09-05 10:15 GMT
  • இருசக்கர வாகனம் திருட்டு தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • 29 இருசக்கர வாகனங்கள் நின்றதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

திருச்சி:

மணப்பாறை அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த 30-ந் தேதி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அப்போது இவரது இருசக்கர வாகனம் திருட்டுபோனது. இதுகுறித்து சரவணன் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை திருச்சி சாலையில் கல்லறை தோட்டம் அருகே உள்ள ஒரு டீக்கடை முன்பு தனது இருசக்கர வாகனம் பதிவு எண் அகற்றப்பட்டு நிற்பதை, சரவணன் கண்டார். அந்த வாகனத்தை ஓட்டி வந்த குமரபட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவரிடம் விசாரித்தபோது, அந்த வாகனத்தை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த முருகேசன் என்பவரிடம் ரூ.4 ஆயிரத்துக்கு வாங்கியதாகவும், வாகனத்துக்கு ஸ்டிக்கர் ஒட்ட வந்ததாகவும் கூறியுள்ளார்.

இது பற்றி மணப்பாறை போலீசாருக்கு தகவல் அளித்த சரவணன், செல்வத்தை போலீசாரிடம் ஒப்படைத்தார். அவரிடமிருந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், முருகேசனை பிடிக்க அவரது வீட்டிற்கு சென்றபோது அங்கு 29 இருசக்கர வாகனங்கள் நின்றதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து முருகேசனை பிடித்து போலீசார் விசாரித்தபோது, இருசக்கர வாகனங்களை வட்டிக்கு அடகு வாங்கும் தொழில் செய்து வருவதாகவும், அங்கு நிற்கும் வாகனங்களை அடகு வாங்கி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் பதிவு எண்களை கொண்டு அதன் உரிமையாளர்களை கண்டறிந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், செல்வம் மற்றும் முருகேசன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வம், முருகேசன் ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

Similar News