கழிவுநீரை சுத்தம் செய்வது குறித்து பயிற்சி முகாம்
- எந்திரங்கள் மூலம் பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்வது குறித்த மாவட்ட அளவிலான ஒருநாள் பயிற்சிமுகாம் நடைபெற்றது.
- பணியின்போது விபத்துகள் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் குறித்து விளக்கம்
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி புயல் நிவாரண கூடத்தில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை மற்றும் பேரூராட்சிகள் இயக்ககம் சார்பில் கழிவுநீர் சேகரிப்பு தொட்டியில் எந்திரங்கள் மூலம் பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்வது குறித்த மாவட்ட அளவிலான ஒருநாள் பயிற்சிமுகாம் நடைபெற்றது.
மாவட்ட பேரூராட்சிகளின் உதவிஇயக்குனர் இப்ராகிம்ஷா, கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த தூய்மைஇந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் விக்னேஸ்வரன், கழிவுநீர் தொட்டியில் இருந்து கழிவு நீரை எப்படி எந்திரங்கள் மூலம் பாதுகாப்பாக சுத்தம் செய்வது என்பது குறித்து பேசினார்.
இந்த பயிற்சி முகாமில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கழிவுநீர் எந்திர உரிமையாளர்கள், டிரைவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் நன்றி கூறினார்
முன்னதாக பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், கடந்த 35 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 300 தூய்மை பணியாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.
எனவே தூய்மை பணியின்போது உயிரிழப்புக்களை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நவீன எந்திரங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியில் விஷவாயுக்களால் ஏற்படும் அபாயம், பணிச்சூழலில் ஆபத்து உள்ளிட்டவற்றை எதிர்கொள்வது, பணியின்போது விபத்துகள் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது என்று தெரிவித்து உள்ளனர்.