உள்ளூர் செய்திகள்

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2024-06-09 11:08 IST   |   Update On 2024-06-09 11:08:00 IST
  • கொடைக்கானலில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
  • மழையால் அருவிகள் மற்றும் நீர் வீழ்ச்சிகளில் நீர்வரத்தும் தற்போது அதிகரித்துள்ளது.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

கோடை விடுமுறை இன்றுடன் முடிவடையும் நிலையில் நாளை தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இருந்தபோதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் முக்கிய சுற்றுலா இடங்களான குணா குகை, பைன்பாரஸ்ட், மோயர்பாய்ண்ட், தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர்.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தொடர் மழையால் அருவிகள் மற்றும் நீர் வீழ்ச்சிகளில் நீர்வரத்தும் தற்போது அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள வெள்ளி நீர்வீழ்ச்சியில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக நீர்வரத்து ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது . தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை கண்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருவதுடன் அருவியின் முன்பு நின்று புகைப்படம் எடுத்து தங்களது இன்பசுற்றுலாவை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர் .

மேலும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் இங்கு நிலவும் குளிரையும் அனுபவித்து வருகின்றனர். மேலும் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கிளாவரை, பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் செறு குளு குளு சீதோசணத்தை அனுபவித்தவாறு இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.

Tags:    

Similar News