உள்ளூர் செய்திகள்

நெல்லையில் இன்று 17 பேருக்கு கொரோனா

Published On 2022-06-19 08:51 GMT   |   Update On 2022-06-19 08:51 GMT
  • நெல்லையில் நேற்று பாதிப்பு 9 ஆக இருந்த நிலையில் இன்று 17 ஆக உயர்ந்தது.
  • நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் படுக்கைகள் தயார்படுத்தும் பணி தொடங்கி உள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

கடந்த 15-ந்தேதி கொரோனா பாதிப்பு பூஜ்யமாக இருந்த நிலையில் மறுநாள் 6 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் தினசரி பாதிப்பு உயர தொடங்கியது. நேற்று பாதிப்பு 9 ஆக இருந்த நிலையில் இன்று 17 ஆக உயர்ந்தது.

இன்றைய பாதிப்பில் மாநகர பகுதியில் மட்டும் 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. நாங்குநேரியில் 5 பேருக்கும், ராதாபுரத்தில் 2 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. மற்ற வட்டாரங்களில் இன்று பாதிப்பு கண்டறியப்படவில்லை.

தற்போது பரவி வரும் புதிய வகை வைரஸ் தொற்றால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பதால் பெரும்பாலானோர் வீட்டு தனிமையிலேயே உள்ளனர். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது.

இதற்கிடையே கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் 50 முதல் 100 படுக்கைகள் வரையிலும் தயார் நிலையில் வைக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் படுக்கைகள் தயார்படுத்தும் பணி தொடங்கி உள்ளது.

கடந்த காலத்தில் கொரோனா அலையின்போது ஒதுக்கப்பட்ட வார்டுகள், படுக்கைகள் அனைத்தும் தயார் நிலையிலேயே இருப்பதாக அரசு மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News