வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
- சுவர் ஏறி குதித்து தப்பிய 2 வாலிபர்கள் சிக்கினர்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு பகுதியில் அடிக்கடி திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்ற வருகிறது. இதனால் போலீசார் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் செய்யாறு அடுத்த கீழ் புதுப்பாக்கம் விரிவு பகுதியில் நள்ளிரவு 1 மணி அளவில் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு வீட்டின் சுவற்றில் இருந்து 2 வாலிபர்கள் குதிப்பதை போலீசார் பார்த்தனர்.
போலீசாரை கண்டவுடன் 2 வாலிபர்களும் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை துரத்திச் சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர்.
அப்போது வாலிபர்களிடம் 3 அரை பவுன் நகை இருந்தது தெரிய வந்தது. வாலிபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. பின்னர் வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.