- அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என புகார்
- நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
செங்கம்:
செங்கம் அருகே உள்ள கரியமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள காரியமங்கலம் பெரிய ஏரியில் தொடர்ந்து ஏரி மண்ணை அனுமதியின்றி எடுத்துச் செல்வதாக அப்பகுதி விவசாயிகள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.
செங்கம் -திருவண்ணா மலை தேசிய நெடுஞ்சாலை பணி தேவைக்காக கரியமங்கலம் பெரிய ஏரியிலிருந்து மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு ஏரி மண் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால் அதன் தொடர்ச்சியாக சுமார் 5-க்கும் மேற்பட்ட லாரிகள் பகல் நேரத்திலேயே ஏரி மண்ணை சுரண்டி எடுத்துச் செல்வதாக அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் தரப்பில் தரப்பில் கூறப்படுகிறது.
கரியமங்கலம் ஏரி தண்ணீரை நம்பி கரியமங்கலம் சுற்றுவட்ட பகுதிகளில் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. ஏற்கனவே கரியமங்கலம் ஏரிக்கு செங்கம் அருகே உள்ள காயம்பட்டு ஏரியிலிருந்து வர வேண்டிய உபரி நீர் கால்வாய் பிரச்சனை காரணமாக தண்ணீர் வரத்து சரிவர வராத சூழல் உள்ளது.
தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக ஏரியில் தண்ணீர் இருப்பு உள்ளது.
மண் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏரி தண்ணீரை நம்பி உள்ள விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளா வதாகவும் தெரிவித்துள்ளனர்.
உரிய அனுமதியின்றி ஏரி மண் எடுத்துச் செல்லும் நபர்கள் குறித்து செங்கத்தில் உள்ள அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர்.
இச்செயலில் ஈடுபட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.