உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

கோடை சீசன் மட்டுமின்றி இடைப்பட்டத்திலும் பரவலாக தர்பூசணி சாகுபடி

Published On 2022-09-28 11:53 GMT   |   Update On 2022-09-28 11:53 GMT
  • கோடை காலத்தில் அறுவடை செய்யும் வகையில் ஆயிரம் ஏக்கர் வரை சாகுபடியானது.
  • ஏக்கருக்கு 20 டன் வரை மகசூலும் எடுத்தனர்.

உடுமலை :

உடுமலை பகுதிக்கு ஆண்டுதோறும் சேலம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோடை சீசனுக்கு பல லோடு தர்பூசணி கொண்டு வரப்பட்டது. எனவே கோடை சீசனை இலக்காக வைத்து புதிய தொழில்நுட்பங்கள் உதவியுடன் கிணற்று ப்பாசனத்துக்கு, தர்பூசணி சாகுபடியிலும் உடுமலை பகுதி விவசாயிகள் களமிறங்கினர்.

கடந்த2 ஆண்டுகளாக உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் கோடை காலத்தில் அறுவடை செய்யும் வகையில் ஆயிரம் ஏக்கர் வரை சாகுபடியானது.நிலப்போர்வை, சொட்டு நீர் பாசனம், நீர் வழி உரம் பயன்பாடு காரணமாக தர்பூசணி காய்களும் திரட்சி யாக பிடித்தது. ஏக்கருக்கு 20 டன் வரை மகசூலும் எடுத்தனர்.ஆனால் கடந்த கோடை சீசனில் ஊரடங்கு, வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இதற்கு விலை கிடைக்கவில்லை.

அறுவடை செய்யாமல் அதை அப்படியே விளைநிலங்களில் விடும் நிலை உருவானது.இந்நிலையில் கோடை சீசன் மட்டுமல்லாது இடைப்ப ட்டத்திலும், பரவலாக தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கோடை சீசனில் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் வகையில் இடைப்பட்டத்தில் தர்பூசணி சாகுபடி செய்துள்ளோம்.வீரிய ரக விதைகளை சாகுபடிக்கு பயன்படுத்துவதால் 70 முதல் 80 நாட்களில் தர்பூசணியை அறுவடை செய்ய முடிகிறது. தற்போது அறுவடைக்கு தயாராகி வருகிறது. பிற மாநில வியாபாரிகள் நேரடியாக விளைநிலங்களுக்கே வந்து கொள்முதல் செய்கின்றனர். பருவமழை சீசன் துவங்கும் முன் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News