உள்ளூர் செய்திகள்

பொதுமக்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர் நித்யா.  

கணபதிபாளையம் ஊராட்சியில் வார்டு உறுப்பினர் காத்திருப்பு போராட்டம்

Published On 2022-07-31 07:55 GMT   |   Update On 2022-07-31 07:55 GMT
  • அடிப்படை வசதிகள் செய்து தர பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.
  • 11 வது வார்டு உறுப்பினர் நித்யா அவரது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலருடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் போராட்டத்தில் ஈடுபட்டார்.

பல்லடம் :

பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையம் ஊராட்சி 11 வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை எனக்கூறி 11 வது வார்டு உறுப்பினர் நித்யா அவரது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலருடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், ஊராட்சி செயலர் பிரபு, பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்களிடம் தனது வார்டில் அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் போன்றவற்றிற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறினார். இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி 2021- 22 ஆம் வருடத்தில் 11-வது வார்டு பகுதியில், சுமார் 40 லட்சம் ரூபாய்க்கு பணிகள் நடைபெற்று உள்ளதாக கூறினார். இதையடுத்து தான் கோரிக்கை வைத்துள்ள பணிகளையும் நிறைவேற்ற வேண்டுமென நித்யா கூறியதை அடுத்து, 3 மாத காலத்தில், அந்தப் பணிகள் நிறைவேற்றித் தரப்படும் என ஊராட்சி மன்றத் தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் கூறியதையடுத்து காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், காத்திருப்பு போராட்டத்தின் போது அங்கு வந்த பா.ஜ.க. ஒன்றிய தலைவர் பூபாலன், மற்றும் நிர்வாகிகளுக்கும், அங்கிருந்த திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு சமாதானப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News