25-ந்தேதி நடைபெறும் போராட்டத்தில் வணிகர்கள்-மின்நுகர்வோர் பங்கேற்க வேண்டும் - தொழில்துறையினர் அழைப்பு
- தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
- ஒருநாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட தொழில் அமைப்புகள் இணைந்து, தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பீக்ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மின்சார நிலை கட்டண உயர்வுகளை வாபஸ் பெற வேண்டும்.ஆண்டுதோறும் 6 சதவீத மின்கட்டண உயர்வு நடைமுறையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகின்றனர். மின்கட்டண உயர்வுகளால் சிறு, குறு தொழில்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் முதல்-அமைச்சர் நேரடியாக தலையிட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த 11ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள தொழில் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள், முதல்வருக்கு, 'இ-மெயில்' அனுப்பினர். மேலும் கோரிக்கையை வலியுறுத்தி, முதல்வருக்கு விரைவு தபால் அனுப்பினர்.
இந்தநிலையில் இன்று ஒருங்கிணைப்பாளர்கள் கோபி பழனியப்பன், முத்துரத்தினம் ,ஸ்ரீ காந்த் ஆகியோர் கூறியதாவது:-மின் கட்டண உயர்வால் தொழிலை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் வருகிற 25-ந் தேதி, தமிழகம் முழுவதும், தொழிற்சாலைகளில் கறுப்பு கொடி ஏற்றி வைத்து, ஒருநாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் கலந்து கொள்கிறது.
மேலும் இந்த போராட்டத்திற்கு வணிகர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ,ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் மின் நுகர்வோர்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றார்.