உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

களிமண்ணால் செய்த அகல்விளக்குகளை பொதுமக்கள் வாங்கி தீபம் ஏற்ற வேண்டும் - மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை

Published On 2022-11-30 07:48 GMT   |   Update On 2022-11-30 07:48 GMT
  • இயற்கை ஒத்துழைக்காத காரணத்தாலும் தீபம் தயாரிப்பு பணிகள் மந்தமான நிலையில் உள்ளது.
  • 1.5 லட்சம் அகல் விளக்குகள் மட்டும் தயாரிக்க முடிந்துள்ளது.

காங்கயம் :

கார்த்திகை தீபத்திருநாள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் தான். அன்றைய தினம் வீடுகள் தோறும் விதவிதமான அகல் விளக்குகள் கண்ணைக் கவரும் வகையில் வரிசை கட்டியிருக்கும். வருகிற 6-ந் தேதி கார்த்திகை தீபத்திருநாள் வரும் நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த அகல் விளக்குகள் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, காங்கயம், அவிநாசி, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பாண்ட கைவினை கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.

காங்கேயம் பகுதியில் சம்பந்தம்பாளையத்தில் பாரம்பரியமாகமண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் குடும்பத்தினர் கடந்த இரு மாத காலமாக அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வண்டல்மண், செம்மண் மற்றும் காற்றுமண் என்று சொல்லப்படும் மணல்கலந்த மண் சேர்த்து தண்ணீரில் ஊறவைத்து பின்னர் சக்கர உருளையில் வைத்து நேர்த்தியாக பல்வேறு விதமான அகல்விளக்குகளை வார்த்தெடுக்கின்றனர்.

இவ்வாறு தயாரான அகல்விளக்குகளை சூளையில் வைத்து சுட்டு பக்குவப்படுத்தி விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். கடந்த 25ஆண்டுகளுக்கு முன்புவரை கிராமங்கள்தோறும் மண்பாண்டத் தொழிலாளர்கள் இருந்தபோது மண்பாண்டங்கள் மற்றும் அகல் விளக்குகள் பண்டமாற்று முறையில் கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது மண்பாண்டங்களுக்கு பதில் பித்தளை, அலுமினியம், எவர்சில்வர் பாத்திரங்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதால் மண்பாண்டங்களின் பயன்பாடு குறைந்ததால் அந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான குடும்பத்தினர் வேறு தொழில்களுக்கு சென்று விட்டனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் மட்டுமே இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருவதால் பண்டமாற்று முறை போய் ரொக்கத்திற்கு அகல்விளக்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் மழைக்காலங்களில் அகல் விளக்குகள் தயாரிப்பு குறைவாக உள்ளது. போதிய களிமண் இல்லாத சூழலும், இயற்கை ஒத்துழைக்காத காரணத்தாலும் தீபம் தயாரிப்பு பணிகள் மந்தமான நிலையில் உள்ளது. இருப்பினும் மக்கள் தேவைக்கேற்ப காங்கயம்,திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தீபங்கள் தயாரித்து அனுப்பப்பட்டு வருகிறது. சிறிய விளக்குகள் ரூ.1 முதல் ரூ.3 வரையிலும், பெரிய மண் விளக்குகள் ரூ.5 முதல் ரூ.8 வரையிலும், ஐந்து முக தீபங்கள் ரூ.15 வரையிலும், குத்து விளக்கு போன்ற தீப வகைகள் ரூ.20க்கும் விற்க்கப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தம்பாளையத்தைச் சேர்ந்த மண்பாண்ட கைவினை கலைஞர் ஒருவர் கூறுகையில், நாங்கள் 5 தலைமுறையாக மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். அருகில் உள்ள குளத்தில் வண்டல் மண் எடுத்து வந்து அதனுடன் செம்மண், காற்றுமண் கலந்து பிசைந்து உருவாக்கி வருகிறோம். நாளொன்றுக்கு தலா ஆயிரம் அகல் விளக்குகள் வரை தயாரித்து வருகிறோம்.

இதில் சாதாரண விளக்கு, பஞ்சமுக அகல்விளக்குகள், கோயில்களில் ஏற்றப்படும் பெரிய அளவிலான விளக்குகள் என பல்வேறு வகையிலான விளக்குகளை தயாரித்து வருகிறோம். நாங்கள் தயாரிக்கும் விளக்குகளை காங்கயம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறோம். இந்த சீசனில் மட்டும் 3 லட்சம் விளக்குகளுக்கு மேல் சப்ளை செய்வோம். ஆனால் களிமண் போதிய அளவில் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் மண் கொண்டு வருவதற்கு பல கெடுபிடிகள் உள்ளது.

தாலுகா விட்டு பக்கத்து தாலுகாவுக்கு மண் கொண்டு செல்ல முடிவதில்லை. அடையாள அட்டையை காண்பித்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் களிமண் கொண்டு வரலாம் என அரசு அனுமதிக்க வேண்டும். இந்த ஆண்டு குறைந்த அளவில் மண் கிடைத்ததால், உற்பத்தியும் குறைந்தது. இதனால் 1.5 லட்சம் அகல் விளக்குகள் மட்டும் தயாரிக்க முடிந்துள்ளது.

பாரம்பரியமாக தொன்று தொட்டு இந்த தொழிலை செய்து கொண்டு வருகிறோம். மக்கள் அனைவரும் களிமண்ணால் கையால் செய்த விளக்குகளை வாங்கி பயன்படுத்தினால் கிராமப்புறங்களில் உள்ள ஏழை மண்பாண்ட தொழிலாளர்கள் பயன்பெறவும் அவர்களின் வாழ்வாதாரம் காக்கவும் வசதியாக இருக்கும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News