படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் பள்ளி மாணவர்கள் - கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
- பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
- போக்குவரத்து காவலர் பணியில் பயணித்த மாணவர்களை இறக்கிவிட்டார் .
திருப்பூர் :
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பெருமாநல்லூர் சாலை மார்க்கமாக ரெயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், பிச்சம்பாளையம், போயம்பாளையம், பெருமாநல்லூர் வழியாக கணக்கப்பாளையம் வரை செல்லக்கூடிய அரசு பேருந்தில் மாணவர்கள் தொங்கியபடி பயணித்து வந்தனர்.
நடத்துனர் பின்னால் மற்றொரு பஸ் வருகிறது. அதில் ஏறுங்கள் என்று கூறியும் மாணவர்கள் கேட்காததால் கோபம் அடைந்த நடத்துனர் பெருமாநல்லூரில் பேருந்து நின்றவுடன் அங்கு போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் இது குறித்து புகார் தெரிவித்தார். போக்குவரத்து காவலர் பணியில் பயணித்த மாணவர்களை இறக்கிவிட்டார் . இதையடு்தது பேருந்து புறப்பட்ட சென்றது.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், நாங்கள் பெருமாநல்லூர் அரசு பள்ளியில் பயின்று வருகிறோம்.இந்தப் பள்ளியில் கணக்கம்பாளையம் பிரிவு, குருவாயூரப்பன் நகர், போயம்பாளையம், பெருமாநல்லூர், குன்னத்தூர் சாலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறோம்.
தினமும் காலை 8.10 மணிக்கு 54-ம் நம்பர் பேருந்தும், 9.05 மணிக்கு 43-ம் நம்பர் பேருந்தும் இயங்கி வருகிறது.இந்த இரு பேருந்துகளை விட்டால் பள்ளிக்கு செல்ல வேறு வழி இல்லை. நான்கு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். பள்ளிக்கு தாமதமாக சென்றால் ஆசிரியர்கள் கண்டிக்கின்றனர். எனவே பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.