உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு வருகிற 24-ந்தேதி முதல் தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரை

Published On 2023-11-20 04:46 GMT   |   Update On 2023-11-20 04:46 GMT
  • அமராவதி அணை வாயிலாக 54,637 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.
  • நீர் திறக்க வேண்டும், என பாசன சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை : 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 29,387 ஏக்கர் பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களும், 25,250 ஏக்கர் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் என 54,637 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.

அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, ஜூன் 1 முதல் மார்ச் 31 வரையும், புதிய ஆயக்கட்டு நிலங்களுக்கு, ஆகஸ்டு1 முதல், மார்ச் 31 வரை வழங்க வேண்டும். நடப்பாண்டு, தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால் அணைக்கு நீர் வரத்து பாதித்தது. இதனால், பாசனத்துக்கு நீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.நிலைப்பயிர்களை காப்பாற்றும் வகையிலும், குடிநீர் தேவைக்காகவும், இரு முறை உயிர்த்தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை துவங்கி, அணைக்கு நீர் வரத்து துவங்கியுள்ள நிலையில், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் திறக்க வேண்டும், என பாசன சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம், திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 18 வாய்க்கால் பாசன நிலங்கள் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, வரும், 24-ந் தேதி முதல், டிசம்பர் 31ம் தேதி வரை நீர் திறக்க, நீர் வளத்துறை அதிகாரிகள் பரிந்துரைத்து, அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளனர்.

அதிகாரிகள் கூறுகையில், அமராவதி அணையின், மொத்தமுள்ள 90 அடி உயரத்தில் 78.22 அடி நீர்மட்டமும், மொத்த கொள்ளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 3,030.18 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 679 மில்லியன் கனஅடி நீர் வரத்து உள்ளது.

அணை நீர் இருப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் வரத்து அடிப்படையில் 3,174.34 மில்லியன் கனஅடி நீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. நீர் வரத்தை பொருத்து, பாசன நிலங்களுக்கு, பாசன காலம் நீடிப்பு செய்யப்படும் என்றனர்.

Tags:    

Similar News