உடுமலை கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சி வழிபாடு
- நவகிரகங்களுக்கு நேற்று சிறப்பு யாகமும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.
- சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ராகு கேது உள்ளிட்ட நவகிரகங்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
உடுமலை:
உலக இயக்கம் மற்றும் நமது உடலோடு தொடர்பு கொண்டு தலையெழுத்தை தீர்மானிப்பது நவகிரகங்கள். அதில் நிழல் கிரகங்களாக ராகு மற்றும் கேது பகவான் திகழ்கிறார்கள்.இந்த இரண்டு கிரகங்களும் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சரித்து அவரவர் திசை மற்றும் தசா புத்திக்கு ஏற்றவாறு பலன்களை அளித்து வருகிறார்கள்.
அந்த வகையில் நேற்று மாலை 3.40 மணிக்கு ராகு கேது பெயர்ச்சி நடந்தது.மேஷ ராசியில் சஞ்சரித்து வந்த ராகு பகவான் மீன ராசிக்கும், துலாம் ராசியில் சஞ்சரித்து வந்த கேது பகவான் கன்னி ராசிக்கும் இடம் பெயர்ந்தனர். இதை முன்னிட்டு நவகிரகங்களுக்கு நேற்று சிறப்பு யாகமும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ராகு கேது உள்ளிட்ட நவகிரகங்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இதையடுத்து பரிகாரம் செய்ய வேண்டிய ராசியினர் ராகு மற்றும் கேது பகவானுக்கு தங்களால் இயன்ற பொருட்களை அளித்து வழிபாடு செய்தனர். ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், தில்லைநகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவில்,குட்டை திடலில் உள்ள சித்தி புத்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட உடுமலை மற்றும் தளி பகுதி கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.