உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விவரங்களை 30-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவு

Published On 2023-11-25 08:18 GMT   |   Update On 2023-11-25 08:18 GMT
  • பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
  • தேர்வுக்கான முதல்கட்ட ஆயத்த பணிகளை தேர்வுத்துறை தொடங்கி உள்ளது.

திருப்பூர்:

10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் விபரங்களை, வருகிற 30-ந்தேதிக்குள் சரிபார்க்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. தேர்வு நடக்கும் நாள் குறித்த விபரம் தெரிய வந்துள்ள நிலையில், தேர்வுக்கான முதல்கட்ட ஆயத்த பணிகளை தேர்வுத்துறை தொடங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக எமிஸ் தளத்தில் தேர்வர் பெயர், பிறந்த தேதி, போட்டோ உள்ளிட்ட 14 தகவல்களை சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர் விவரங்களில் ஏதேனும் தவறு ஏற்பட்டால், சம்மந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும். மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய பிறகு திருத்தங்கள் கோரி தேர்வுத்துறைக்கு விண்ணப்பம் அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.

எனவே ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் உடனடியாக திருத்தம் மேற்கொண்டு நவம்பர் 30-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்வுத்துறை இயக்குனரகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து விரிவான வழிகாட்டுதல்கள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், தேர்வுத்துறை இயக்குனரகத்தின் அறிவுறுத்தல்கள் குறித்து உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டுள்ளது. பெயர் பட்டியலின் அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால் தலைமை ஆசிரியர் நேரடி கவனத்தில் இப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News