பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் - ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
- மருத்துவபடியை 300 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
- பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
திருப்பூர்:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (ஓய்வு பெற்றோர் பிரிவு) பொது செயலாளர் ஆறுமுகம், மாநில முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதிய மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கப்பட்ட பின், பென்ஷனர்கள், குடும்ப பென்ஷனர்கள், தங்கள் மருத்துவ செலவுக்கான முழுத் தொகையை பெற முடிவதில்லை.மிக குறைந்த மாத பென்ஷன் பெறுபவர்கள், மருத்துவ செலவு காப்பீடுக்கு மாத தவணையாக 497 ரூபாய் செலுத்துவது கடினம். ஐகோர்ட் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பின் படி, விருப்பமுள்ளவர்களை மட்டும் இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும்.
இதற்கு பதிலாக பென்ஷனர்கள் அருகேயுள்ள அலோபதி, ஆயுர்வேதம் உள்ளிட்ட தங்களுக்கு உகந்த மருத்துவ முறையில் சிகிச்சை பெற்று மருத்துவ செலவினங்களை திரும்ப பெறும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.பென்ஷனர்கள் இறக்கும் போது வழங்கப்படும், ஈமகிரியை செலவின தொகையை 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். மருத்துவபடியை 300 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
தி.மு.க., தேர்தல் வாக்குறுதிபடி 70 வயது கடந்தவர்களுக்கு 10 சதவீதம் 75 வயது கடந்தவர்களுக்கு, 15 சதவீதம் பென்ஷன் தொகை உயர்த்தி வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.