உள்ளூர் செய்திகள்

பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதை படத்தில் காணலாம். 

பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Published On 2023-10-14 10:22 GMT   |   Update On 2023-10-14 10:23 GMT
  • சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.
  • நீண்ட நாட்களுக்குப் பிறகு அருவியில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவு உயர்ந்து உள்ளது.

உடுமலை:

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது.இந்த அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் நீர்வரத்தை அளித்து வருகிறது. அருவியில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த சூழலில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை.இதன் காரணமாக அருவிக்கு நீர் வரத்தை அளிக்கக்கூடிய ஆறுகள் ஓடைகள் வறண்டு விட்டது. இதனால் அருவியும் நீர்வரத்து இல்லாமல் வெறுமனே காட்சி அளித்து வந்தது.சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.இந்த நிலையில் அருவியின் நீராதாரங்களான குழிப்பட்டி, குருமலை பகுதியில் திடீரென மழை பெய்தது.இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து ஏற்பட்டது.இதனால் திருமூர்த்திமலைக்கு வருகை தந்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அத்துடன் உற்சாகத்தோடு அருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். மேலும் குடும்பத்தோடு அருவிப்பகுதியில் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.அதைத்தொடர்ந்து அடிவார பகுதிக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி சென்றனர்.நீண்ட நாட்களுக்குப் பிறகு அருவியில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவு உயர்ந்து உள்ளது.

Tags:    

Similar News