உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

100 சதவீத ஓட்டுப்பதிவுக்காக விழிப்புணர்வு ஓவியப்போட்டி

Published On 2023-11-05 10:49 GMT   |   Update On 2023-11-05 10:49 GMT
  • வருகிற ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
  • வெற்றி பெற்றவர்களுக்கு, ரொக்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

திருப்பூர்:

வருகிற ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நூறு சதவீத ஓட்டுப்பதிவை சித்தரிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 25 பள்ளிகள், 25 கல்லூரிகளில் ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது.

இந்நிலையில் பல்லடம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட முதலிபாளையம் நிப்ட்-டீ பேஷன் கல்லூரியில், போஸ்டர் உருவாக்கும் போட்டி நடத்தப்பட்டது. இதில் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு நூறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் வகையில், விதவிதமான போஸ்டர் ஓவியங்கள் வரைந்து வண்ணம் தீட்டினர். போட்டியில், மாணவர் பரீத் அகமது முதலிடமும், மாணவி திவ்யாஸ்ரீ இரண்டாமிடமும், ஸ்வேதா மூன்றாமிடமும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு, ரொக்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

திருப்பூர் தெற்கு தாலுகா தனி தாசில்தார் பாபு, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கதிர்வேல், கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினார். பள்ளி, கல்லுாரிகளில் தனித்தனியே போட்டி நடத்தப்பட்டு சிறந்த ஓவியம் தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசு 500 ரூபாய், இரண்டாம் பரிசு 300 மற்றும் மூன்றாம் பரிசு 200 ரூபாய் வழங்கப்படுகிறது. அவற்றில், மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் ஓவியத்துக்கு ரூ.5 ஆயிரமும், இரண்டாம் இடத்திற்கு ரூ.2 ஆயிரமும், மூன்றாமிடம் பிடிக்கும் ஓவியத்துக்கு 1,000 ரூபாய் என வழங்கப்படும். மாவட்ட அளவில் சிறந்த ஓவியங்கள் தேர்வு செய்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும். மாநில அளவில் சிறந்த ஓவியத்துக்கு ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.20 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. சிறந்த ஓவியங்கள் வருகிற தேர்தலில், நூறு சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வுக்கான போஸ்டர்களில் பயன்படுத்தப்படும் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News