உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

பருவமழை காலத்திற்குள் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் அமைச்சரிடம் விவசாயிகள் மனு

Published On 2022-07-17 08:25 GMT   |   Update On 2022-07-17 08:26 GMT
  • திட்டப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
  • அரசின் சார்பில் இழப்பீடு தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

அவினாசி:

கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி, 24 ஆயிரத்து 468 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும் வகையில் 32 பொதுப்பணித்துறை குளங்கள், 42 ஊராட்சி ஒன்றிய குளங்கள், 971 குட்டைகளில் நீர் செறிவூட்டும் வகையிலான அத்திக்கடவு - அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டப்பணி நடந்து வருகிறது.

மாநில அரசின் 1,652 கோடி ரூபாய் செலவில், கடந்த 2019 டிசம்பர் 25ல் திட்டப்பணி துவங்கியது. 6 நீரேற்ற நிலையங்கள், குளம், குட்டைகளுக்கு குழாய் பொருத்தும் பணி உட்பட 94 சதவீத பணிகள் இதுவரை நடந்து முடிந்துள்ளது என திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இத்திட்டத்துக்கென திட்டம் சம்பந்தப்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு அரசின் சார்பில் இழப்பீடு தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சில பயனாளிகளுக்கு 4 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டிய நிலையில் அந்த தொகையை ஒதுக்க அரசின் சார்பில் நிர்வாக அனுமதி வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் திட்டப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

இது குறித்து அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் சுப்ரமணியம், குருசாமி உள்ளிட்டோர் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்து, மனு வழங்கியுள்ளனர்.அதில், கூறியிருப்பதாவது:-

அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்தி வரும் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இத்திட்டத்திற்கு குழாய் பதிக்க நிலம் வழங்கிய விவசாயிகள் சிலருக்கு, இழப்பீடு தொகை இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.எனவே அதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட்டு இழப்பீடு வழங்கவும், தற்போதைய பருவமழை காலத்திற்குள் பணியை முடித்து திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News