உள்ளூர் செய்திகள்

திருமுருகன் பூண்டி நகராட்சித் தலைவர் மழையால் இடிந்த வீட்டை ஆய்வு செய்த காட்சி.

திருமுருகன்பூண்டி அருகே மழையால் இடிந்த வீட்டை நகராட்சி தலைவர் ஆய்வு

Published On 2022-11-16 05:01 GMT   |   Update On 2022-11-16 05:01 GMT
  • சாலையில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
  • தண்ணீரில் நீந்தியபடியும், நடந்து செல்பவர்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

அனுப்பர்பாளையம் :

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஒருசில இடங்களில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததுடன், சாலைகள் முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இந்த நிலையில் மாநகராட்சி 25-வது வார்டு மூகாம்பிகை காலனி பகுதியில் போதிய அளவில் வடிகால் வசதி இல்லாததால் சாலையில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தண்ணீரில் நீந்தியபடியும், நடந்து செல்பவர்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் உள்பட பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்த பகுதியில் முறையாக வடிகால் அமைத்து, மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையம் அம்பேத்கர் நகர் சமுதாயக்கூடம் அருகே உள்ள சரஸ் (வயது 44) வீட்டின் ஒருபகுதி நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் சரசும், அவருடைய மகன்கள் மனோஜ், தனசேகர் ஆகியோர் உள்புறமாக தூங்கிக் கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி நகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று வீடு இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட சேதம் தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.

மேலும் சம்பவ இடத்தை ஆய்வு செய்த திருமுருகன் பூண்டி நகராட்சித் தலைவர் குமார் இடிந்து கிடக்கும் வீட்டை சீரமைக்க தனது சொந்த செலவில் ரூ. 5000 மதிப்பில் ஹாலோ பிளாக் கல் வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளார்.

Tags:    

Similar News