உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சாமி சிலைகள் சேதப்படுத்தப்படவில்லை - காவல்துறை தகவல்

Published On 2023-05-25 11:03 IST   |   Update On 2023-05-25 11:03:00 IST
  • உண்டியல்களின் சீல்களை சேதப்படுத்தி இருந்தது.
  • உண்டியலை உடைத்து திருடலாம் என்று திட்டமிட்டு கோபுரத்துக்குள் ஏறி மறைந்துள்ளார்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் காலை நடை திறந்தபோது அங்கு உள்ள 63 நாயன்மார் சாமி சிலைகளின் துணிகளை அகற்றியும், அதன் மேலிருந்த சிமெண்டால் கட்டப்பட்ட கலசம் போன்ற அமைப்புகளை உடைத்தும், உண்டியல்களின் சீல்களை சேதப்படுத்தியும் இருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கோவில் செயல் அதிகாரி மருதுபாண்டியன் அளித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் ராஜகோபுரத்தில் பதுங்கி இருந்த சேவூர் அருகே சாவக்காட்டுப்பாளையம் அரவங்காடு தத்தனூரை சேர்ந்த தையல் தொழிலாளி சரவணபாரதி (வயது 32) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவருக்கு பணம் தேவைப்பட்டதால் குறுக்கு வழியில் திருடலாம் என நினைத்து அவினாசி வந்த அவர், கடந்த 22-ந் தேதி மாலை கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட்டுவிட்டு, அங்கேயே அமர்ந்து அவர் உண்டியலை உடைத்து திருடலாம் என்று திட்டமிட்டு கோபுரத்துக்குள் ஏறி மறைந்துள்ளார்.

பின்னர் இரவு 11 மணிக்கு கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி கோவிலுக்குள் இருந்த பித்தளை வேலை எடுத்து உண்டியலை உடைக்க முயற்சித்துள்ளார். இரவு முழுவதும் கோவிலுக்குள் இருந்தவர் அவ்வப்போது மனநிலைக்கு ஏற்ப இவ்வாறு செய்துள்ளார். கோவிலில் சாமி சிலைகள் எதுவும் சேதப்படுத்தப்படவில்லை. எந்த அரசியல் அமைப்பையும் சேர்ந்தவர் இல்லை. இந்த வழக்கை துரிதமான முறையில் விசாரித்து சம்பவம் நடந்த அன்றே வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News