உள்ளூர் செய்திகள்

குப்பையில் வீசப்பட்ட குப்பை தொட்டியை படத்தில் காணலாம்.

உடுமலை ஊராட்சி பகுதிகளில் குப்பையில் வீசப்பட்ட குப்பை தொட்டிகள் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-05-31 11:48 GMT   |   Update On 2023-05-31 11:48 GMT
  • கிராமங்களில் சுகாதார சீர்கேட்டை தவிர்க்க, திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
  • மக்கள் தொகை அடிப்படையில், வழங்கிய தொட்டிகளை தேவையான இடத்தில் வைக்கவில்லை.

உடுமலை :

அரசு நிதியில் வழங்கப்பட்ட குப்பைத்தொட்டிகளை, பயன்பாடு இல்லாமல், வீசி எறிந்துள்ள ஊராட்சி நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.

மத்திய, மாநில அரசுகள் சார்பில், கிராமங்களில் சுகாதார சீர்கேட்டை தவிர்க்க, திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. திட்டத்தின் கீழ் ஊராட்சிகள்தோறும், தள்ளிச்செல்லும் வகையிலான குப்பைத்தொட்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மக்கள் தொகை அடிப்படையில், வழங்கிய தொட்டிகளை தேவையான இடத்தில் வைக்கவில்லை. படிப்படியாக இந்த குப்பைத்தொட்டிகள் பயன்பாடு இல்லாமல், குப்பையில் போடப்பட்டு ள்ளன. பல கிராமங்களில், குப்பைத்தொட்டிகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி, காணாமல் போயுள்ளன. இதனால், திறந்தவெளியில், குப்பை கொட்டுவது அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு ஊராட்சிக்கும், பல லட்சம் ரூபாய் அரசு நிதியில், வழங்கப்பட்ட குப்பைத்தொட்டிகளின் அவல நிலை குறித்து, மண்டல அலுவலர்கள், ஒன்றிய அதிகாரிகள் உள்ளிட்ட எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. படிப்படியாக அனைத்து குடியிருப்புகளிலும், குப்பை தொட்டியே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. திறந்தவெளியில் கொட்டும் குப்பையை தீ வைத்து எரித்து, கடமையை முடித்து கொள்கின்றனர்.

இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு மக்கள் அனுப்பியுள்ள மனுவில், 'குடிமங்கலம் ஒன்றியம், கொங்கல்நகரம் உள்ளிட்ட பல ஊராட்சிகளில், குப்பைத்தொட்டிகள் பயன்பாடு இல்லாமல், உள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் முற்றிலுமாக பின்பற்றப்படுவதில்லை. அலட்சியமாக செயல்பட்டு வரும் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளனர்.

Tags:    

Similar News