உள்ளூர் செய்திகள்

 பணி நியமன ஆணையை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் வழங்கிய போது எடுத்த படம்.

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 2.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

Published On 2023-11-06 10:42 GMT   |   Update On 2023-11-06 10:42 GMT
  • முகாமில் 110 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன.
  • வேலை நியமன ஆணையை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் அமைச்சர் கயல்விழி வழங்கினார்கள்.

தாராபுரம்:

தாராபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்ட அலுவலகம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.

முகாமுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கினார். தனியார் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமை தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

இந்த முகாமில் 110 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் 1,023 பேர் பங்கேற்றனர். அவர்களில் 470 பேர் வேலைக்கு தேர்வுசெய்யப்பட்டனர். அவர்களுக்கான வேலை நியமன ஆணையை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சி குறித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ேபசியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்ட நாள் முதல் அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் 2.50 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டு உள்ளது. அனைவருக்கும் அரசு வேலை என்பது சாத்தியம் இல்லை. இளைஞர்கள் வேலை கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் முயற்சி செய்ய வேண்டும். மேலும் சுய தொழில் தொடங்க அரசு வழங்கும் சலுகைகளை பயன் படுத்தி கொண்டு நீங்கள் நான்கு பேருக்கு வேலை வழங்கும் அளவிற்கு முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் வரலட்சுமி, வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் ஜோதி மணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவரும், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளருமான இல.பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News