கோப்புபடம்.
தாராபுரம் வருவாய் ஆய்வாளர் அதிரடி இடமாற்றம் - மாவட்ட வருவாய் அதிகாரி நடவடிக்கை
- கடந்த 17-ந் தேதி உயரதிகாரிகளுக்கு மதிய உணவை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தார்.
- வீடியோ எடுத்து பரப்பிய இருவரிடம் போலீசார் விசாரித்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவில் டவுன் வருவாய் ஆய்வா ளராக தனலட்சுமி (வயது 40) பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 17-ந் தேதி உயரதிகாரிகளுக்கு மதிய உணவை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தார். இதை வீடியோ எடுத்த ஒருவர் அதனை சமூகவலை தளங்களில் பரப்பினார்.
இதுதொடர்பாக வருவாய் ஆய்வாளர் தாராபுரம் போலீசில் புகார் அளித்தார். வீடியோ எடுத்து பரப்பிய இருவரிடம் போலீசார் விசாரித்தனர். அதில் ரேவந்த் என்பவர் இருப்பிட சான்றிதழ் கோரி விண்ணப்பித்தார். ஆவணங்கள் முறையாக இல்லாத காரணத்தால் நிராகரித்ததால் கோபமடைந்த ரேவந்த் தனது நண்பருடன் சேர்ந்து வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி செல்போன் மூலம் உயரதிகாரிகளுக்கு சாப்பாடு ஆர்டர் செய்வதை வீடியோ எடுத்து பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
இந்நிலையில், வீடியோ வைரலான நிலையில், உயர் அதிகாரிக்கு சாப்பாடு ஆர்டர் செய்த வருவாய் ஆய்வாளர் தனலட்சுமியை அலங்கியம் ஒன்றியத்துக்கு மாற்றம் செய்து திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் உத்தரவிட்டார்.