உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அரசு திட்ட பயன்களை பெற கிரென்ஸ் பதிவு - விவசாயிகளுக்கு அழைப்பு

Published On 2023-04-08 12:51 IST   |   Update On 2023-04-08 12:51:00 IST
  • கிராமம் வாரியாக விவசாயிகளின் தகவல்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தியுள்ளது.
  • விவசாயிகள் குறித்த விபரங்கள், வங்கி கணக்கு, நில விபரம் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது.

குடிமங்கலம் :

மத்திய, மாநில அரசுகளின் திட்ட பயன்களை பெற கிரென்ஸ் திட்டத்தின் கீழ் குடிமங்கலம் வட்டார விவசாயிகள் பதிவு செய்து கொள்ள வேளாண் துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு வழங்கும், அனைத்து திட்டங்களும், அனைத்து விவசாயிகளுக்கும் சென்று சேரும் வகையில் அரசு துறைகளை ஒருங்கிணைத்து மத்திய அரசு புதிய இணைய தளம் துவக்கி, கிராமம் வாரியாக விவசாயிகளின் தகவல்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் விவசாயிகளின் தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இது குறித்து குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது :- அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து திட்ட பயன்களும் கிடைக்கும் வகையில் கிரென்ஸ் (Grower online Registration of Agricultural Input System) என்ற இணையதளத்தில் விவசாயிகளின் நில உடமை விபரம், ஆதார், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு விபரம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் வருவாய்த்துறை, வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட அலுவலர்களால் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் வருவாய்த்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவு துறை, பட்டு வளர்ச்சி துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்பு துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, விதை சான்றுத்துறை, சர்க்கரை துறை உள்ளிட்ட அரசு துறைகளின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும், நேரடியாக மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் சென்றடையும் வகையில் புதிய இணைய தளமான கிரென்ஸ் துவக்கப்பட்டுள்ளது.

இந்த இணைய தளத்தில் விவசாயிகள் குறித்த விபரங்கள், வங்கி கணக்கு, நில விபரம் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. எனவே குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள விவசாயிகள் ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், சிட்டா, போட்டோ, ஸ்மார்ட் ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றுடன், வி.ஏ.ஓ., மற்றும் வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும்.வரும் நிதி ஆண்டில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு எளிதாக சென்றடையும் வகையில் இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளதால் அனைத்து விவசாயிகளும் உடனடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

Similar News