வடமாநில தொழிலாளர்கள் மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை விசைத்தறியாளர்கள் மனு
- பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நவீன தானியங்கி விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.
- தமிழர்கள் தாக்குவது போல் பொய்யான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
பல்லடம் :
தென்னிந்திய நாடா இல்லா விசைத்தறியாளர்கள் சங்க நிர்வாகிகள் பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்ட் அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்ட் சவுமியாவை சந்தித்து கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நவீன தானியங்கி விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதில் வட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீப காலமாக தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களை தமிழர்கள் தாக்குவது போல் பொய்யான, போட்டோ மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதன் காரணமாக வட மாநில தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஆகையால் தாங்கள் இந்த தவறான வதந்திகளை பரப்புபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பல்லடத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலைதான் உள்ளது என்பதை தாங்கள் தெரியப்படுத்தியும், வட இந்திய தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பீதியை கட்டுப்படுத்த வீண் வதந்திகளை பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், மக்கள் அதிகம் கூடும் கடைவீதி போன்ற இடங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி அவர்களின் அச்சத்தை போக்கவும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.